அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறையை நிறுத்தி, பகல்நேர சேமிப்பு நேரத்தை (Daylight Saving Time) ஆண்டு முழுவதும் அமல்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 308 உறுப்பினர்களும், எதிராக 117 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம், அடுத்தகட்டமாக செனட் சபையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. செனட் சபையிலும் அங்கீகாரம் கிடைத்தால், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கடிகார நேரத்தை மீண்டும் சாதாரண நேரத்திற்கு (Standard Time) மாற்றும் நடைமுறை முடிவுக்கு வரும்.
எனினும், இந்த நிரந்தர பகல்நேர சேமிப்பு நேர முறையிலிருந்து மாநிலங்கள் விரும்பினால் விலகிக்கொள்ளும் வாய்ப்பும் சட்டமூலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை ஆதரிப்பவர்கள், ஆண்டுக்கு இருமுறை நேரத்தை மாற்றுவது மக்களின் தூக்கச் சுழற்சியை பாதிப்பதுடன், பணியிட விபத்துகள் மற்றும் சாலை விபத்துகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது எனக் கூறுகின்றனர். மேலும், குளிர்காலத்தில் மாலை நேரங்களில் கூடுதல் வெளிச்சம் கிடைப்பது வணிக நடவடிக்கைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் சாதகமாக அமையும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த மாற்றத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குடியரசுக் கட்சி செனட்டர் டொம் காட்டன் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள், இந்த மாற்றத்தால் குளிர்காலத்தில் சூரிய உதயம் ஒரு மணி நேரம் தாமதமாகும் என்றும், இதனால் பல பகுதிகளில் மாணவர்கள் அதிகாலை இருட்டிலேயே பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 1974ஆம் ஆண்டு எரிசக்தி நுகர்வைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் இதேபோன்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அதே ஆண்டில் அது கைவிடப்பட்டது.
தற்போது அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அரிசோனா மாநிலங்கள் பகல்நேர சேமிப்பு நேர முறையை பின்பற்றுவதில்லை. புதிய சட்டமூலம் சட்டமாக அமைய, செனட் சபையின் ஒப்புதலும் தொடர்ந்து ஜனாதிபதியின் அங்கீகாரமும் பெறப்பட வேண்டும்.
