கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வாழும் சுமார் 8 மில்லியன் மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் களனி கங்கையைப் பாதுகாக்கும் நோக்கில், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நுவரெலியா முதல் அம்பத்தலே வரை களனி கங்கையின் 27 இடங்களில் இருந்து நீரைப் பெற்று, சுமார் இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது. இதனுடன், களனி கங்கை பல தொழிற்சாலைகளின் பிரதான நீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.
எனினும், களனி கங்கைப் படுகையில் இயங்கி வரும் சுமார் 6,000 தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள மனிதச் செயற்பாடுகள் காரணமாக, ஆற்றின் நீர்தரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடிநீரின் தரமும் நதியின் சுற்றுச்சூழல் அமைப்பும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, களனி கங்கையின் நீர்வளத்தையும் சுற்றுச்சூழலையும் நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
