பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தாவில் பரபரப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் Lionel Messi அவர்களின் பிரம்மாண்ட சிலை தற்போது பாதுகாப்பு காரணங்களால் அகற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலை கடந்த ஆண்டு டிசம்பரில், Kolkata நகரில் திறந்து வைக்கப்பட்டது. உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்திருக்கும் வடிவில் அமைக்கப்பட்ட இந்த தங்க நிற சிலை சுமார் 21 மீட்டர் (70 அடி) உயரம் கொண்டதாகும்.
பரபரப்பான சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த சிலை பலத்த காற்றில் அசைவதாகவும், அது நிலைத்தன்மை குறைவாக இருப்பதாகவும் பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து மேற்கு வங்க அரசு பொறியாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிலையை அகற்ற முடிவு செய்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் Saratwat Mukherjee தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “சிலை காற்றில் ஆடுவதை கவனித்தோம். பாதுகாப்பு காரணங்களால் அதை அகற்ற வேண்டியுள்ளது. ஆனால் இது எளிதான பணியல்ல,” என தெரிவித்துள்ளார்.
தற்போது சிலை கீழே விழாமல் இருக்க அதன் பகுதிகளில் கயிறுகள் கட்டி தற்காலிகமாக நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
உலகப் புகழ்பெற்ற வீரரான Lionel Messi தற்போது Inter Miami CF அணிக்காக விளையாடி வருகிறார். அவரது எதிர்கால சர்வதேச போட்டி பங்கேற்பு குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே தொடர்ந்து நிலவுகிறது.
இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
