
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றமான நிலையும் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (19) குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளன.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,831.23 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் 80.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு உலக அரசியல் சூழ்நிலைகளும், அமெரிக்க டொலரின் வலுவூட்டலும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்க விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த புதிய உயர்வு காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
