
உரத்தட்டுப்பாடு மற்றும் நெல் விலை சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்காவிட்டால், கொழும்பில் பாரிய அளவிலான சிவில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என கலன்பிந்துணுவெவ, துடுவல பரணகம கெமுனு ஐக்கிய விவசாயிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
சந்தையில் தற்போது உர விநியோகம் மிகவும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு மூடை உரத்தின் விலை 9,000 ரூபாவிலிருந்து 18,500 ரூபா வரை உயர்ந்துள்ளதால், இப்போகப் பயிர்ச்செய்கையை தொடர்வதில் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை, ஒரு கிலோ நெல்லின் விலை 100 முதல் 105 ரூபா வரை குறைந்துள்ளமை காரணமாக, பயிர்ச்செய்கைக்காக செலவிட்ட முதலீட்டுத் தொகையையே மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால், விவசாயக் குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்கவும், உர விலையை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமானால், நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து கொழும்பில் தொடர் போராட்டங்களை நடத்த தயங்கமாட்டோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
