அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தையின் முதல் நாள் அமர்வு சுவிட்சர்லாந்தில் நிறைவடைந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் பல முக்கிய பிராந்திய மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், லெபனானில் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு நடைபெறாத பட்சத்தில், ஈரான் இதுவரை சந்தித்ததை விட கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை ஈரான் பொருட்படுத்தவில்லை என சமூக வலைத்தளமான எக்ஸ் மூலம் தெரிவித்துள்ளார்.
முதலாம் நாள் பேச்சுவார்த்தையில் லெபனான் நிலைமை, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதிச் சொத்துகளை விடுவிப்பது, மசகு எண்ணெய் வர்த்தகத்தின் மீதான அமெரிக்க தடைகளில் தற்காலிக தளர்வுகளைப் பெறுவது போன்ற பொருளாதார விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக ஈரானிய தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்ற சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.
தெற்கு லெபனானில் அமைந்துள்ள போஃபர்ட் கோட்டை பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்காது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.
மேலும், காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
