ஈரானுடன் ஏற்பட்ட போரின் விளைவாக அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
‘சென்டர் ஃபார் ஸ்ட்ரேட்டஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்’ (CSIS) அமைப்பு வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்த இழப்பில் வெடிபொருட்கள், அழிக்கப்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும் சேதமடைந்த இராணுவ முகாம்களின் மீளமைப்புச் செலவுகள் அடங்குகின்றன.

எனினும், 2026 நிதியாண்டிற்கான 1 டிரில்லியன் டொலர் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்கனவே உள்ள செயல்பாட்டுச் செலவுகள் இந்த கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை என அந்த அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் மார்க் கான்சியன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறைக்கு அப்பால், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் முன்னாள் இராணுவ வீரர்கள் தொடர்பான சேவைகளுக்காக கூடுதலாக சுமார் 1 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, போரின் தாக்கம் எரிபொருள் சந்தையிலும் கடுமையாகப் பதிவாகியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு கேலன் எரிபொருளின் சராசரி விலை 3 டொலருக்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது அது 4 டொலரைத் தாண்டியுள்ளது.
பிரவுன் பல்கலைக்கழகத்தின் எரிசக்தி செலவுக் கண்காணிப்பு ஆய்வின்படி, போர் இல்லாதிருந்தால் செலவழித்திருக்கும் தொகையை விட, ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் சராசரியாக 253 டொலர் கூடுதலாக எரிபொருளுக்காக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நான்கு மாதங்களாக மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக உலக சந்தையில் சுமார் 1.15 பில்லியன் பீப்பாய் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ‘கெப்லர்’ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தால், அமெரிக்காவின் ஆண்டு பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் வருமான உயர்வை விட வாழ்க்கைச் செலவுகள் வேகமாக அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
