
வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூர்ந்து இன்று அதிகாலை நந்திக்கடலில் மலர்தூவி மற்றும் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து, முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “எங்கள் வரலாற்றின் வேதனையான இறுதிக்காட்சிகளுக்கு மௌன சாட்சியாக நந்திக்கடல் திகழ்கிறது. எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்த இந்த மண்ணில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது கடமையாகும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயம் பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
இந்த நினைவேந்தல் மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா மற்றும் இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
