மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை நாளை (09) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிக வெப்பநிலையால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்த வெளியில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், இடையிடையே நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெயிலில் அதிக உடல் உழைப்பை ஏற்படுத்தும் பணிகளைத் தவிர்ப்பதுடன், வெளியே செல்லும் போது வெள்ளை அல்லது மென்மையான நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பால் உடல்நலத்தில் ஏதேனும் அசௌகரியங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டால், தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
