மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடும் இணைய மோசடி தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து அனுப்பப்பட்டதாகத் தோன்றும் இந்த குறுஞ்செய்திகளில், வீதிப் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டு, அதற்காக சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இவ்வாறான எந்தவொரு அறிவிப்பையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிடவில்லை என்றும், பரவி வரும் குறுஞ்செய்திகள் அனைத்தும் முற்றிலும் போலியானவை என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே, இத்தகைய குறுஞ்செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளைத் திறக்க வேண்டாம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை பகிர வேண்டாம், மேலும் அந்தச் செய்திகளுக்கு எந்தவித பதிலும் வழங்க வேண்டாம் என பொதுமக்களிடம் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளைப் பெற்றவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
