சீனா நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் பரப்பளவிலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குவாங்சி பகுதியில் பண்ணைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதில், அதிலிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குயிஜவ் மாகாணத்தில் நால்வரும், ஹுனான் மாகாணத்தில் மேலும் நால்வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, ஹுபெய் மாகாணத்தின் தாழ்வான கிராமப்பகுதியில் மூவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை தீவிரமாகப் பாதித்துள்ள ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் பல பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குடியிருப்புகள் மற்றும் வர்த்தகக் கட்டிடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், முக்கிய வீதிகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மின்விநியோகம் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், சீன அரசு முதற்கட்டமாக 2.2 கோடி அமெரிக்க டொலர் பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
