
ஈரான் போர் காரணமாக உலகளவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டிய நிலையில், அவுஸ்திரேலியா கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
நீண்டதூரப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘ரோட் ட்ரெயின்கள்’ எனப்படும் பெரிய பாரவூர்திகள், டீசல் விலை அதிகரிப்பால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
போருக்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் 180.2 சென்ட் இருந்த நிலையில், தற்போது அது 312.7 சென்ட்டாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையும் 171 சென்ட்டில் இருந்து 240.1 சென்ட்டாக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பாரவூர்தியின் எரிபொருள் தொட்டியை நிரப்புவதற்கான செலவு 3,600 அவுஸ்திரேலிய டொலர்களிலிருந்து 7,500 டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.
சிறு அளவிலான போக்குவரத்து தொழில்முனைவோர் கடுமையான நிதிச் சுமையை சந்தித்து வருகின்றனர். மாதத்திற்கு 150,000 டொலர்கள் செலவிட்டிருந்த ஒருவர், தற்போது 300,000 டொலர்கள் வரை எரிபொருளுக்காக செலவிட வேண்டியுள்ளதாகவும், வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற 60 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் 1,200 கிலோமீட்டர் நீளமான நல்லார்பார் பாலைவனப் பாதையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில எரிபொருள் நிலையங்களுக்கு இடையே 200 கி.மீ வரை தூரம் உள்ளதால், டீசல் இல்லாமை ஓட்டுநர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, எரிபொருளைச் சேமிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், போக்குவரத்துத் துறைக்கு ஆதரவாக 1 பில்லியன் டொலர் வட்டியற்ற கடனுதவி திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால், வட்டியற்ற கடன்களும் கூட சுமையாக உள்ளதாக கூறும் பாரவூர்தி உரிமையாளர்கள், நேரடி நிதி உதவி அல்லது எரிபொருள் விலை குறைப்பு நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
