
ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் காணப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த காணொளி மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிபாஷா பாசு, சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி துகாராம் முண்டேவை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் கொள்வனவு செய்யும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிபாஷா பாசுவின் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு கவனம் பெற்ற நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, பால் மற்றும் பன்னீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் கலப்படம் தொடர்பிலும் அதிகாரிகள் ஆய்வுகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட சில நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
