பொதுப் போக்குவரத்தை பொதுமக்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான பயணத் தெரிவாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
“கனவு இலக்கு” (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பொது இடங்கள் மற்றும் பயண வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மக்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்து துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் அதிகரித்துள்ளமை, அத்துறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நகர மேம்பாட்டுப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, அடுத்த ஆண்டு தொடருந்து துறைக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும், மருதானையிலிருந்து மாக்கும்புர, பாணந்துறை மற்றும் றாகமை வரையிலான மார்க்கங்களை உள்ளடக்கிய மின்சார தொடருந்து திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
