நீர்கொழும்பு சிறைக் கூரையில் போராடிய பெண் கைதி குறித்து வைரலான ‘வைத்தியபீட மாணவி’ கதை – உண்மையல்ல என உறுதி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் “வைத்தியபீட மாணவி” என்ற உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் கற்பனையானது என உண்மைக் கண்டறியும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தின் போது சில கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடம்பெற்றிருந்த பெண் கைதி ஒருவரை அடிப்படையாகக் கொண்டு, “சந்துனி” என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை பரவியது. அதில், அவர் பதுளையைச் சேர்ந்த திறமையான மாணவி என்றும், உயர்தரப் பரீட்சையில் வைத்தியபீடத்திற்குத் தெரிவாகியிருந்த நிலையில், காதலன் அனுப்பிய பார்சல் மூலம் அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்றதாகவும் கூறப்பட்டது.

எனினும், இந்தக் கதை குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதனை முதன்முதலில் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த நலிந்த தனரஞ்சன் என்பவர், அது உண்மைக் கதை அல்ல என்றும், சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக தானே கற்பனையாக உருவாக்கிய பதிவு என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் தன்னை புலனாய்வு ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவர் ஒரு புகைப்படக் கலைஞர் மட்டுமே என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top