நீதியமைச்சரும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார, பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் அதிகாரப்பூர்வ சிறைச்சாலையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, பழைய போகம்பரை சிறைச்சாலையின் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை, அவற்றின் கொள்ளளவை விட அதிகரித்துள்ள நிலையில், சிறை வசதிகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலை கட்டமைப்புகள் தொடர்பான விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன.
முன்னதாக பழைய போகம்பரை சிறைச்சாலையை அருங்காட்சியகம் அல்லது சுற்றுலா மையமாக மாற்றும் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டிருந்தன. எனினும், தற்போதைய சிறைச்சாலைத் தேவையை கருத்தில் கொண்டு, அது மீண்டும் முழுமையான சிறைச்சாலையாக செயல்படும் வகையில் அரசாங்கம் வர்த்தமானி மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, காலி மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலையும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார முன்னதாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
