வாகன இறக்குமதிக்கான சுங்க வரிகளின் மீது விதிக்கப்பட்ட தற்காலிக கூடுதல் கட்டணத்தின் விளைவாக, இலங்கையின் தினசரி வெளிநாட்டு செலாவணி வெளியேற்றம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் தாக்கம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், கூடுதல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் ஒரே நாளில் 88 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் வாகன இறக்குமதிக்காக திறக்கப்பட்டதாக கூறினார்.
எனினும், புதிய கொள்கை நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வாகன இறக்குமதியால் ஏற்படும் வெளிநாட்டு செலாவணி செலவினங்கள் குறையத் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதி அமைச்சரின் தகவலின்படி, கடந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக நாளொன்றுக்கு சராசரியாக 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டிருந்தது. 2026 ஆம் ஆண்டில் கடன் கடிதங்களின் மதிப்பு அதிகரித்ததால் இந்தச் செலவு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்திருந்தது.
ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் வாகன இறக்குமதிக்கான தினசரி சராசரி வெளிநாட்டு செலாவணி செலவு 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை மாற்றங்கள் எதிர்பார்த்த பலனை அளித்து வருவதாகவும், சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிடத்தக்க வகையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கடந்த மே 15 முதல் சில தெரிவு செய்யப்பட்ட இறக்குமதி பொருட்களுக்கான சுங்க இறக்குமதி வரிகளில் 50 வீத தற்காலிக கூடுதல் கட்டணத்தை அமுல்படுத்தியது. இந்த நடவடிக்கை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
