
உலர் வலயப் பகுதிகளில் வரவிருக்கும் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நெல் விதைப்பு, உர விநியோகம் உள்ளிட்ட முக்கிய விவசாயப் பணிகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திறம்பட மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் குருகுலவ பகுதியில் அண்மையில் நடைபெற்ற விசேட பயிலரங்கில் இந்தத் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
பயிலரங்கின் போது, முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைக் கொண்ட விவசாய ட்ரோன் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இது இலங்கையின் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
மேலும், வரவிருக்கும் பெரும்போக பருவத்தில் இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தை விவசாய நடவடிக்கைகளுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
நவீன தொழில்நுட்பத்தை விவசாயத் துறையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் உற்பத்தித் திறனை உயர்த்துவதோடு, நேரத்தையும் செலவையும் குறைக்கும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
