
ஈரானுடன் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அதுகுறித்த இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், “முக்கிய முடிவுகளை எடுப்பது நான்தான்; நெதன்யாகு அல்ல. எனவே, அமெரிக்கா எட்டும் ஒப்பந்தத்தை அவர் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளார்.
அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலை இலக்காகக் கொண்டு ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்கா–ஈரான் இடையே முன்னெடுக்கப்பட்டு வரும் அமைதி முயற்சிகளை பாதிக்காது என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மத்திய கிழக்கில் இத்தகைய மோதல்கள் பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்ட அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பிலும் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
நெதன்யாகுவின் அண்மைய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே விமர்சனக் கருத்துகளை வெளியிட்டிருந்த ட்ரம்ப், தற்போது அவரின் அதிகார வரம்பை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளமை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
