
இலங்கையில் தேனீக்கள் உள்ளிட்ட மகரந்தச்சேர்க்கை உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவது, நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் விவசாயத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
விவசாயத் திணைக்களத்தின் தகவல்களின்படி, தேனீக்களின் மகரந்தச்சேர்க்கை மூலம் பல பயிர்களின் விளைச்சலை 20 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும். எனினும், நவீன விவசாய முறைகள், வாழ்விட அழிப்பு மற்றும் அதிகளவிலான இரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக தேனீக்களின் எண்ணிக்கை கவலைக்கிடமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
பெரிய அளவிலான ஒற்றைப்பயிர்ச் செய்கை மற்றும் இயற்கைத் தாவரங்களின் அழிப்பு காரணமாக தேனீக்களின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதுடன், அவற்றின் உணவுத் தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அதிக விளைச்சலை நோக்கமாகக் கொண்டு விவசாயிகள் பயன்படுத்தும் வீரியமிக்க பூச்சிக்கொல்லிகள் தேனீக்களின் உயிர்வாழ்வை நேரடியாக அச்சுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வுகளின்படி, இந்த இரசாயனங்களின் தாக்கம் தேனீக்களின் ஆயுட்காலத்தைக் குறைப்பதோடு, அவற்றின் வழிகாட்டும் திறன், தொடர்பாடல் மற்றும் இனப்பெருக்கச் செயற்பாடுகளையும் பாதிக்கிறது. சில சந்தர்ப்பங்களில் முழு தேனீக் கூட்டங்களே அழிந்துபோகும் நிலையும் ஏற்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேனீக்களின் எண்ணிக்கை குறைந்ததன் விளைவாக, பாகற்காய், தர்பூசணி மற்றும் கொடித்தோடை (Passion Fruit) போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர் செலவு அதிகரிப்பதுடன், உற்பத்திச் செலவும் உயர்ந்து விவசாயிகளின் இலாபம் குறைந்து வருகிறது.
இந்த நிலைமைக்கு தீர்வாக, சூழலுக்கு உகந்த ‘நல்ல விவசாய நடைமுறைகள்’ பின்பற்றப்பட வேண்டும் என விவசாயத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, பயிர்கள் பூக்கும் காலங்களில் இரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைப்பதுடன், விவசாய நிலங்களில் தேனீப் பெட்டிகளை நிறுவுமாறும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு தோட்டங்களில் மாம்பழம், வாழை, வெள்ளரி, கோப்பி, ரோஜா மற்றும் சூரியகாந்தி போன்ற தேனீக்களை ஈர்க்கும் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் உணவு உற்பத்தியில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தரவுகளின்படி, உலகிற்கு உணவு வழங்கும் முக்கிய 100 பயிர் வகைகளில் 71 வகைகள் தேனீக்களின் மகரந்தச்சேர்ப்பை நம்பியுள்ளன. இதனால், தேனீக்களின் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழல் மட்டுமல்லாது, எதிர்கால உணவுப் பாதுகாப்பிற்கும் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.
