
இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவு ஊடாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான கடற்பகுதிகளும், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டியிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த கடல் பிராந்தியங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள், படகோட்டிகள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
காலநிலை சீரடையும் வரை தேவையற்ற மற்றும் ஆபத்தான கடல் பயணங்களைத் தவிர்க்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
