
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் காரணமாக மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலன்களுக்கு அரசாங்கம் உயர்ந்த முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தரப்பினரும் மிகுந்த நிதானத்தையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டுமென இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனை உறுதிப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளுக்கு தொடர்ந்தும் வலுவான ஆதரவை வழங்குவதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
