
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை காரணமாகக் காட்டி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாது என சீன நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனம், AI பயன்பாட்டால் பணிகள் குறைந்ததாகக் கூறி தரக் கட்டுப்பாட்டு பணியாளர் ஒருவர் மீது ஊதியக் குறைப்பை மேற்கொள்ள முயன்றுள்ளது. அந்த பணியாளர் அதை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, தொழில்நுட்ப முன்னேற்றத்தை காரணமாகக் காட்டி அவரை பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், வழக்கை விசாரித்த ஹாங்சோவ் இடைநிலை மக்கள் நீதிமன்றம் நிறுவனத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமே காரணமாக கொண்டு பணிநீக்கம் அல்லது ஊதியக் குறைப்பு செய்ய முடியாது என்றும், நிதி நெருக்கடி போன்ற சட்டபூர்வ காரணங்கள் இல்லாமல் வேலை ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
