“காலம் கடந்து கொண்டிருக்கிறது” : ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ள நிலையில், “காலம் கடந்து கொண்டிருக்கிறது” என டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது எனவும், “காலம் மிகவும் முக்கியமானது” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கருத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அமெரிக்காவின் புதிய முன்மொழிவுக்கு ஈரான் பதிலளித்துள்ளதாகவும், வோஷிங்டனுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

ஈரானின் வெளியுறவு அமைச்சகம், தங்கள் கவலைகள் அமெரிக்காவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், போதிய உறுதியான சலுகைகள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதனால், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முட்டுக்கட்டையில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மோதல் புள்ளியாக தொடர்கிறது.

அமெரிக்கா, ஈரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஈரான் தரப்பில், போர் நிறுத்தம், துறைமுக முற்றுகை நீக்கம், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் இழப்பீடு உள்ளிட்ட பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து முன்னெடுத்ததாக கூறப்படும் நடவடிக்கைகள் மற்றும் ஈரானின் பதிலடி நடவடிக்கைகள் காரணமாக பிராந்திய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கட்டுப்பாடுகள் உலக எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top