தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து வாக்களித்தார்.
இதேவேளை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மகளும் இயக்குநருமான சௌந்தர்யாவும் வந்திருந்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் பிரபலங்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

