
இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மட்டும் 360-க்கும் அதிகமான இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு (SLCERT) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அப்பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல, பொதுமக்களை ஏமாற்றுவதற்காக மோசடிக்காரர்கள் தற்போது புதிய மற்றும் நுட்பமான தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக எச்சரித்தார்.
உலகளாவிய மற்றும் உள்நாட்டில் பிரபலமான வர்த்தக நிறுவனங்களின் பெயர்கள், இலச்சினைகள் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி விளம்பரங்கள் பரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த போலி விளம்பரங்கள் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பிற நிதிசார் தகவல்கள் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, இணையவழி போலி விளம்பரங்கள் மூலம் பொதுமக்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவை எனவும் சாருக தமுனுபொல சுட்டிக்காட்டினார்.
எனவே, இணையத்தில் காணப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைப்புகளை அணுகும் போது பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
