இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள் முனையத்தில் வரிவிலக்கு (Duty Free) விற்பனை வசதிகளை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாகப்பட்டினம்–காங்கேசன்துறை கப்பல் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துறைமுகத்தில் வழங்கப்படும் சேவைகளை சர்வதேச விமான நிலையம் மற்றும் கடல்சார் முனையங்களுக்கு இணையான தரத்தில் மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாடு கடல்சார் சபை (TNMB) மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம், இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தை எளிதாக்கி, சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு முக்கியமான இணைப்பாக செயல்பட்டு வருகிறது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் சேவை தொடங்கியதிலிருந்து இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்தக் கடல்வழி சேவையை பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்மொழியப்பட்ட வரிவிலக்கு கடைகள் மூலம் சர்வதேச பயணிகள் சுங்க வரியிலிருந்து விலக்கு பெற்ற பொருட்களை வாங்கும் வசதி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, இந்தியா–இலங்கை இடையிலான கடல்வழி போக்குவரத்து, சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
