பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.75% அதிகரிப்பு
ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியை இலக்காகக் கொண்டு அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது.

இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.75 சதவீதம் உயர்ந்து 97.8 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே, பந்தர் அப்பாஸ் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
எந்த நாட்டிலுள்ள தளங்கள் தாக்கப்பட்டன என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகாத நிலையில், சில தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதாக குவைத் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
