
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை, ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த நிலைமையின் தாக்கங்கள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எல் நினோ உருவாகும் வாய்ப்பு அதிகரிப்பு
எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சக்திவாய்ந்த ‘எல் நினோ’ நிலைமை உருவாகுவதற்கான வாய்ப்பு 80 சதவீதத்துக்கும் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மழைவீழ்ச்சியில் மாற்றம் ஏற்படலாம்
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மழைவீழ்ச்சி மீண்டும் குறைவடையக்கூடும் எனவும், இதனால் நாட்டில் நிலவும் வறட்சி நிலை மேலும் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
