
பொதுமக்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
வளிமண்டலவியல் திணைக்களம் கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை சில இடங்களில் “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் அருந்துதல், நாளின் மிகவும் வெப்பமான நேரங்களில் தேவையற்ற வெளிப்புறச் செயற்பாடுகளைத் தவிர்த்தல், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதை குறைத்தல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
