வடக்கு மாகாணத்தில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றை ‘பசுமை சக்தித் தீவுகள்’ (Green Energy Islands) ஆக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

தற்போது இந்த மூன்று தீவுகளிலும் நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy System – HRES) திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, பசுமை எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
எரிசக்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேலும், பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீளத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளும் கலந்துரையாடப்பட்டன.அத்துடன், கெரவலப்பிட்டிய–கொழும்பு துறைமுக மின்சார பரிமாற்றக் கோடு, சம்பூர்–கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய மின்சார அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றமும் இந்தச் சந்திப்பில் மீளாய்வு செய்யப்பட்டது.
