
நாட்டின் சில பகுதிகளில் இன்று (15) லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மேலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை நேற்று (14) மாலை 6.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அதாவது வெப்பச் சுட்டெண், அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நீண்ட நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
