செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக நீடித்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச் இன்னும் சில வாரங்களில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் முன்கூட்டியே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற ஆதரவாளர்களின் பேரணியில் உரையாற்றிய வுசிச், “இன்னும் சில வாரங்கள் மட்டுமே நான் ஜனாதிபதியாக இருப்பேன். அதன் பின்னர் பதவியை இராஜினாமா செய்வேன்” என அறிவித்தார்.
2027 ஆம் ஆண்டு வரை அவரது இரண்டாவது மற்றும் இறுதிப் பதவிக்காலம் நீடிக்கவிருந்த நிலையிலும், இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் செர்பிய அரசியலில் முக்கிய அதிகாரத்தை வுசிச் வகித்து வருகிறார்.
2024 ஆம் ஆண்டு நவம்பரில் நோவி சாட் நகரில் உள்ள புகையிரத நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அரசின் ஊழல் மற்றும் உட்கட்டமைப்பு நிர்வாகத் தோல்விக்கு எதிராக மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
கடந்த 18 மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போராட்டங்கள், 2000 ஆம் ஆண்டு ஸ்லோபோடன் மிலோசெவிக் ஆட்சிக்குப் பிறகு செர்பியாவில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியாகக் கருதப்படுகின்றன.
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினாலும், வுசிச் அரசியலில் இருந்து முழுமையாக விலக வாய்ப்பில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அவரது ‘செர்பிய முற்போக்கு கட்சி’ வெற்றி பெற்றால், அவர் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், “மக்கள் போராட்டங்களால் ஏற்படக்கூடிய அரசியல் பின்னடைவைத் தவிர்த்து அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே வுசிச் முன்கூட்டிய தேர்தலை அறிவித்துள்ளார்” என்று மாணவர் இயக்கத் தலைவர் சாவோ மனோஜ்லோவிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
