
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (க.பொ.த. சா/த) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் பெற்றுள்ள சிறந்த பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமாகப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பெற்றோரிடம் சிறுவர் மற்றும் இளைஞர் உளநல நிபுணர் மியுர சந்திரதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்களின் மனநிலை மற்றும் அவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் சிறந்த பெறுபேறுகளை தொடர்ந்து பகிர்வது, எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மாணவர்களின் வெற்றியை கொண்டாடும் போது மற்றவர்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் பெற்றோர் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தால், அவர்களைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடைய தேவையான சரியான வழிகாட்டல்களையும் பெற்றோர் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் எதிர்பார்த்த பலனைப் பெறாதது அல்லது தேர்ச்சி பெறத் தவறியது வாழ்க்கையின் முடிவல்ல என்றும், அதற்காக மாணவர்கள் மனச்சோர்வடையக் கூடாது என்றும் உளநல நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.
உலகில் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான திறமையும் துறையும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பரீட்சையில் பின்னடைவைச் சந்தித்த மாணவர்கள் நிபுணர்கள் அல்லது அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, தங்களுக்கு ஏற்ற கல்வி அல்லது தொழிற்பயிற்சி பாதையைத் தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த நேரத்தில், பெறுபேறுகள் எவ்வாறாக இருந்தாலும் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
