
நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு, திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (15) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான்–நெடுந்தீவு இடையே சேவையில் இருந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் ஒரே நேரத்தில் பழுதடைந்ததால் பயணிகள் சேவையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், அவற்றை விரைவாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், வடதாரகையின் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து அது மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்காக இயக்கப்படுகிறது.
மற்றொரு படகான நெடுந்தாரகை தற்போது காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தில் திருத்தப் பணிகளில் உள்ளது. அதன் பணிகள் நிறைவடைந்தவுடன் அதுவும் விரைவில் சேவையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குமுதினி படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் அதன் திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவை நிறைவடைந்ததும், அந்தப் படகும் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
