
ஈரானிய தாக்குதல்களை அடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவைத் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் காரணமாக குவைத் நோக்கிச் சென்ற சில விமானங்கள் மாற்று வழித்தடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழக்கிழமை அதிகாலை, குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.50 மணி முதல் வான்வெளி மூடல் அமல்படுத்தப்பட்டதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நிலைமையை பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நீங்கியதும் வான்வெளி மீண்டும் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை வளைகுடா நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
