
15 வயதிலேயே இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணிக்குள் நுழைந்த மிக இளைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் வாழ்த்துத் தெரிவிக்க வந்த பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து இந்திய ஊடகத்துக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி தனது மகிழ்ச்சியையும், மகனின் கிரிக்கெட் பயணத்தின் பின்னணியையும் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “இது எங்கள் குடும்பத்துக்கு மிகவும் பெருமையான தருணம். பல ஆண்டுகளாகக் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. தற்போது வைபவ் இலங்கையில் பயிற்சியில் இருப்பதால் அவருடன் இன்னும் பேச முடியவில்லை. அணித் தேர்வுக்கு முந்தைய இரவு அவர் என்னிடம் பேசியபோது மிகவும் பதற்றமாக இருந்தார். அவரது இதயம் வேகமாகத் துடிப்பதாகக் கூறினார். அப்போது நான் அவருக்கு தைரியம் அளித்து அமைதிப்படுத்தினேன்,” என்றார்.வைபவ்வை சச்சின் டெண்டுல்கர் மற்றும் சர் டொன் பிராட்மேன் போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு பேசப்படுவது குறித்து கேட்கப்பட்டபோது, அத்தகைய ஒப்பீடுகள் தற்போது பொருத்தமற்றவை என சஞ்சீவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
மேலும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பேட் கம்மின்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வைபவ்வின் அச்சமற்ற அணுகுமுறை குறித்து அவர் விளக்கமளித்தார்.
“இது முற்றிலும் வைபவ்வின் சொந்த உத்தி. சிறுவயதிலிருந்தே வயதில் மூத்த வீரர்களுடன் விளையாடியபோது, பலர் அவரை ஒரு குழந்தையாகவே பார்த்தனர். அப்போது எதிரணியின் முக்கிய பந்துவீச்சாளரை நான் அவருக்குக் காட்டுவேன். அந்தப் பந்துவீச்சாளரையே குறிவைத்து சிக்ஸர் அடிப்பதன் மூலம், தனது வயதை அல்ல, திறமையை மதிக்க வேண்டும் என்ற செய்தியை அவர் வெளிப்படுத்துவார். இது அவராகவே உருவாக்கிக் கொண்ட மனப்பாங்கு,” என்று அவர் கூறினார்.சர்வதேச டி20 கிரிக்கெட் மூலம் இந்திய அணியில் அறிமுகமாக உள்ள வைபவ் சூர்யவன்ஷி, குறுகிய வடிவ கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக அவரது தந்தை தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் பெற்றுள்ள வைபவ், 50 ஓவர் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 332 ஓட்டங்கள் குவித்த சாதனையையும் பெற்றுள்ளார். அதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதும் அவருக்கு சம அளவு ஆர்வம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
