
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அவசர அறிவுரை
நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொகுபிட்டிய பகுதிகள் விழிப்புணர்வு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, குருவிட்ட, எஹலியகொட, பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத்த, கலவானை மற்றும் நிவித்திகலை பிரதேச செயலகப் பிரிவுகளும் அபாய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்க, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொரண, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவிற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், அவசர தேவைகள் ஏற்பட்டால் பிரதேச செயலக அதிகாரிகள் அல்லது அனர்த்த முகாமைத்துவ பிரிவினருடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
