
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த பயணிகள் கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் பல மணிநேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கப்பல் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டது. வழக்கமாக சுமார் நான்கு மணிநேரத்தில் சென்றடைய வேண்டிய இந்தப் பயணம், மோசமான கடல் நிலை மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக நீண்ட நேரம் எடுத்ததாக கூறப்படுகிறது.
நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் உள்ள கல்லார் கடற்பகுதியை அணைந்தபோது, கப்பலின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நேரத்தில் கப்பலில் 144 பயணிகள் இருந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. தகவல் கிடைத்ததும் இந்திய அதிகாரிகளும் கடற்றொழிலாளர்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், கோளாறுக்குள்ளான கப்பல் மெதுவாக இழுத்து வரப்பட்டு பாதுகாப்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் இருந்த அனைத்து பயணிகளும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
