
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இன்று (08) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார்.
அப்போது அவர், விவசாயத்தை வெறும் பொருளாதாரத் துறையாக மட்டுமே பார்க்காமல், “உயிர்காக்கும் துறை” என்ற அணுகுமுறையுடன் இலங்கையும் வியட்நாமும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக வியட்நாம் மேற்கொண்ட மாற்றங்களை விளக்கிய அவர், “மானிய பொருளாதார முறையிலிருந்து சந்தைப் பொருளாதாரக் கொள்கைக்கு நாங்கள் மாறினோம். இன்று வியட்நாம் விவசாய உற்பத்தியில் முன்னிலை வகிப்பதற்கு எமது கடின உழைப்பும் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையும் காரணமாகும்,” என்றார்.
இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் வெறும் ஆவணங்களாக மட்டுமே இல்லாமல், நடைமுறையில் சிறப்பாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், இலங்கையின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளுக்கு வியட்நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்தார். கடல்சார் பாதுகாப்பையும் பிராந்திய அமைதியையும் உறுதிப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.
யுத்தத்தின் கொடுமைகளை வியட்நாம் நன்கு அனுபவித்த நாடு என குறிப்பிட்ட டோ லாம், “பெரும் போருக்குப் பிறகு இலங்கை மீண்டு முன்னேறிய விதம் பாராட்டத்தக்கது. இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் அமைதிக்காக வியட்நாம் தொடர்ந்துஆதரவளிக்கும்,” என தெரிவித்தார்.
சர்வதேச அரங்கில் வியட்நாம் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உறவுப் பாலமாக இலங்கை செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இறுதியாக, இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
