
கட்டணங்கள் குறைக்கப்படும் என அரசாங்கம் முன்பு அறிவித்திருந்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் சுமார் 11 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் காரணமாக சுமார் 18 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சுமையை பொதுமக்கள் மீது திணிக்க வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்கம் அந்த இழப்பை மறைமுக வரிகளின் மூலம் மக்களிடமிருந்து வசூலிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த மாதம் 10 ஆம் திகதியளவில் மின்சாரக் கட்டணத்தை 11% வரை உயர்த்தும் திட்டம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உணவு, மருந்து மற்றும் விவசாய உபகரணங்களுக்கு VAT நீக்கப்படும் என கூறப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு வரியுடன் சேர்த்து சுமார் 22% வரை வரி வசூலிக்கப்படுவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
