2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைச் சார்ந்த விசாரணைகளில் புதிய தகவல்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில், பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை மூன்று முறை நேரில் சந்தித்து பேசியதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புகளின் போது பேராசிரியர் குணரத்னவுடன் இரு பெண்களும் சென்றிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் இலங்கை இராணுவத்தில் மேஜர் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை பிள்ளையான் தனது சிறைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது யாரேனும் அணுகினால் பேச்சை மாற்றியதாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் 2015 முதல் 2021 வரை பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடையதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் குறித்து மேலதிக விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
