
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் முக்கியமான கடல் வணிக வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு முன்னெடுக்கிறது.
பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ஈரான் அணு ஆயுதங்களை கொண்டிருக்கக் கூடாது என்பதே 99 சதவீத முக்கிய அம்சம் என வலியுறுத்தினார்.
பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மோதலால், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த காலத்தை பயன்படுத்தி நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்ட அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஆனால், ஈரான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை மூலம் ஜலசந்தி திறக்கப்படும் என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
