
இலங்கை ஒரு நட்பு நாடாக இருப்பதால், எந்த நேரத்திலும் உதவி செய்ய ஈரான் தயாராக உள்ளது என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியபோது, இலங்கை எரிபொருள் அல்லது பிற அத்தியாவசிய பொருட்களை கோரினால் அவற்றை வழங்குவதற்கு ஈரான் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், தனது நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணையை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். இலங்கை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டாம் என்பதே ஈரானின் விருப்பம் என்றும், இலங்கை தங்களுக்கு மிகுந்த மரியாதைக்குரிய நாடாகும் என்றும் தூதுவர் கூறினார்.
அத்துடன், சமீபத்தில் ஈரானிய போர்க்கப்பல் ‘ஐரிஸ் தேனா’ சம்பவத்தில் உதவி வழங்கியதற்காக இலங்கைக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.
மேலும், ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.