அமெரிக்கா, ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், செங்கடல் வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹூதி அமைப்புக்கு ஈரான் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஈரானின் உயர்மட்ட தலைமைத்துவத்தில் விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றதாகவும் அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான அறிவுறுத்தல்கள், ஈரானுடன் நெருங்கிய தொடர்புடைய ஹூதி அமைப்புக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பாதையாக விளங்கும் செங்கடல் வழித்தடத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், சர்வதேச எண்ணெய் சந்தை மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படக்கூடும் என அவதானிகள் எச்சரித்துள்ளனர்.
எனினும், இந்தத் தகவல்கள் தொடர்பாக ஈரான் அல்லது ஹூதி அமைப்புகள் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வெளியிடவில்லை.
