அவுஸ்திரேலிய அரசு, பெரும்பாலான விசா வகைகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கணிசமாக உயர்த்தியுள்ளது.

2026–2027 நிதியாண்டின் தொடக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கட்டண உயர்வு, சர்வதேச மாணவர்கள், தற்காலிக பட்டப்படிப்பு விசாவுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் குடும்ப அடிப்படையிலான குடியேற்ற விண்ணப்பதாரர்களை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திருத்தங்களின்படி, மாணவர் விசா விண்ணப்பக் கட்டணம் 2,500 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளை, தற்காலிக பட்டப்படிப்பு (Temporary Graduate) விசாவுக்கான கட்டணம் 5,750 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபர்களின் துணைவர் மற்றும் பெற்றோருக்கான விசா விண்ணப்பக் கட்டணங்களும் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. திறன்சார் குடியேற்றம் மற்றும் நிரந்தர குடியிருப்பு விசா பிரிவுகளுக்கான கட்டணங்களிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கவும், குடியேறவும் திட்டமிடும் சர்வதேச மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை ஏற்படுத்தும் என குடிவரவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், திறன்சார் தொழிலாளர்களுக்கான மற்றும் பிற குடியேற்ற வழிமுறைகள் தொடர்ந்தும் திறந்தே உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திறன்சார் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்வது, வீட்டுவசதி நெருக்கடியை சமாளிப்பது மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியை சமநிலைப்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியா தனது குடிவரவு கொள்கைகளை மறுசீரமைத்து வரும் நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, விசாவுக்கு விண்ணப்பிக்க திட்டமிடுபவர்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன் அண்மைய கட்டண விவரங்கள் மற்றும் தகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
