
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் தயாராகி வரும் ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது என ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசு ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஒப்பந்தம், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் மோதல் நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் அணுசக்தி தொடர்பான விவகாரங்கள் குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இடம்பெறாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் திகதி தொடர்பில் இன்னும் உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகாத போதிலும், எதிர்வரும் நாட்களில் அது இடம்பெறுவதற்கான சாத்தியம் தொடர்ந்தும் காணப்படுவதாகக் கூறினார்.
அதேவேளை, அமெரிக்க தரப்பின் நிலைப்பாடுகள் அடிக்கடி மாறிவரும் சூழலில், இந்த செயல்முறை தொடர்பான எந்தவொரு அறிவிப்பையும் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய அவசியம் உள்ளதாகவும் இஸ்மாயில் பாகேய் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது.
