
இலங்கையில் 2027ஆம் ஆண்டு முதல் பாடசாலை பரீட்சைகள் மற்றும் தவணை விடுமுறைகள் மீண்டும் பழைய கால அட்டவணைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ தெரிவித்துள்ளார். அவரது குறிப்புப்படி, 2020ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலையை மீண்டும் அமல்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற வானிலை போன்ற காரணங்களால் 2020ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை நாட்காட்டியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையை சீரமைக்கும் வகையில் 2027ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலை தவணைகளும் மற்றும் பொதுப் பரீட்சைகளும் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்குவதற்காக, 2026ஆம் ஆண்டில் மீதமுள்ள இரண்டு பள்ளி விடுமுறை காலங்கள் வழக்கத்தை விட நீடிக்கப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி டிசம்பர் மாதத்தில் மாற்றமின்றி நடைபெறும் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
