
நாட்டில் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எந்தத் திட்டமும் தற்போது அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாகவும், செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி வளங்களைப் பயன்படுத்தி நிலைமை கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2025–2026 ஆண்டுக்கான நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மின்சார உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டாலும், அதன் சுமை மக்களிடம் போடப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதியும் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கூறினார். நிலக்கரி விநியோகத்தில் தவறு செய்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அவை போதாமையெனில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தச் செலவினச் சுமையை பொதுமக்கள் அல்லது அரசுத் திறைசேரி ஏற்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதும் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.
