
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மேற்கொண்ட தாக்குதல் கத்தாரின் எரிசக்தி துறையில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி எனக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், கத்தாரின் முக்கியமான Ras Laffan Industrial City எரிவாயு உற்பத்தி தளம் சேதமடைந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் முன்னணி LNG ஏற்றுமதியாளரான கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி திறன் சுமார் 17% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தார் எரிசக்தித்துறை அமைச்சர் Saad Sherida Al-Kaabi கூறுகையில், இந்தத் தாக்குதலால் ஆண்டுதோறும் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் வருமான இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சேதமடைந்த உற்பத்தி வசதிகளை முழுமையாக சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, இத்தாலி, பெல்ஜியம், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கொண்டிருந்த நீண்டகால எரிவாயு விநியோக ஒப்பந்தங்களில்கட்டாயத் தடை ‘Force Majeure’ அறிவிக்க கத்தார் பரிசீலித்து வருகிறது. இதனால், ஐரோப்பாவின் மின்சார உற்பத்தி, இந்தியாவின் வீட்டு மற்றும் உணவகஎரிவாயு LPG பயன்பாடு, மேலும் தென் கொரியாவின் சிப் உற்பத்திக்குத் தேவையான ஹீலியம் விநியோகம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், புனித ரமழான்மாதத்தின் போது ஒரு முஸ்லிம் நாடே இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது கவலைக்குரியது என கத்தார் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் மேலும் அலைச்சலை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.